Monday 14 April, 2014

ஸ்ரீரங்கம் சேர்த்தி 2014




ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி நேற்று. ஒவ்வொரு பங்குனி உத்திரத்தன்றும் தாயாரும் நம்பெருமாளும் சேர்ந்து தாயார் சன்னதி சரணாகதி மண்டபத்தில் சேர்ந்து சேவை சாதிப்பதற்கு சேர்த்தி என்று பெயர்.ஸ்ரீரெங்கநாதர் உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை சாதித்த நிகழ்ச்சி 16ம் தேதி நடந்தது.உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்து இருந்த திருக்கோலத்தை 16.4.2014 அன்று இரவு உறையூரில் கண்டு ஆனந்தித்தோம்.அன்றைய தினம் கோவில் வெளிபிரகார மண்டபத்தில் நடைபெறும் மேளக்கச்சேரி அதிஅற்புதமாக இருக்கும்.(ஸ்பீக்கரை கொஞ்சம் குறைக்க வேண்டும்).பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சேர்த்தி சேவை நேற்று நடந்தது. அன்றைய தினம் காலை ஆறு மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து ஸ்ரீரெங்கநாதர் தங்க பல்லக்கத்தில் இருந்து புறப்படுவார். சித்திரை வீதிகள், உத்திர வீதிகளில் வலம் வந்து திருச்சுற்று வழியாக காலை 9.30 மணிக்கு ஸ்ரீ தாயார் சன்னதியை அடைவார்.இதன் பிறகு பிரணய கலகம் என்றழைக்கப்படும் மட்டையடி நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீரெங்கநாதர் தான் அணிந்து இருந்த மோதிரத்தை உறையூர் நாச்சியாருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருப்பார். அவ்வாறு கொடுத்து விட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதாயாரிடம் வரும்போது மோதிரம் எங்கே? என்று ஸ்ரீரெங்கநாதரிடம் சண்டையிட்டு அவரை மட்டையால் தாக்கும் நிகழ்ச்சி நடித்து காட்டப்படும். தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள்  அரங்கன் பல்லக்குமீது வீசிவர உடனே நம்பெருமாள் பல்லக்கை மூடிக்கொண்டு பயந்தமாதிரி பின்னோக்கி நகர...இந்த வேடிக்கை விளையாட்டு ஊடல் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை இந்த வினோதமான நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீதாயார் சன்னதிக்கு வருவார்கள். சமாதானமடைந்த ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதரை மண்டபத்தில் அனுமதிப்பார் . அதன் பிறகு ஏகாந்தம்.பகல் இரண்டு மணிக்கு பங்குனி உத்திர மண்டபத்தை அடைவார். இரவு 10.30 மணி வரை ஸ்ரீதாயாருடன் சேர்த்தி சேவை சாதிக்கிறார்.வருடத்தில் பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதர் சேர்ந்திருப்பர். அன்றையதினம் வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வேண்டுவன கிடைக்கும். திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக இந்த சேர்த்தி வைபவத்தை காணும் பாக்கியம் பெருமாள் அருளால் கிடைத்து வருகிறது.இலவச சேவை, 50.00 ரூ சேவை மற்றும் ரூ.250 கியூ.மாலை 4.00 மணிக்கு நானும் ஜயந்தியும் கியூவில் நின்றோம் ஒருமணிநேரத்தில் சேவையாயிற்று.தாயார் எப்போதும் நம்பெருமாளுடன் சேர்ந்து இருக்கும் நாளில் மிகுந்த பூரிப்புடன் இருப்பார்.வாராவாரம் சனிக்கிழமை சேவிக்கும் தாயாருக்கும் இன்றைய தாயாருக்கும் இருக்கும் வித்தியாசம் உணரமட்டுமே முடியும்.இந்த முறை நெருக்கடி இல்லை.பிடித்துத் தள்ளுவது இல்லை. சேவை முடித்து வசந்த மண்டபம் வழியாக நந்தவனம்...சக்கரத்தாழ்வார் சன்னதி...வழியாக வெளியேறினோம்.நந்த வனப்பகுதியில் சுடச் சுட பானையில் அக்கார அடிசில்....விறகடுப்பு வாசனையுடன் ...ஆளுக்கு ஒரு கப் சாப்பிட்டோம்..

             அக்கார அடிசில் (அக்காரவடிசில்) விற்பனை பானையிலிருந்து


                   நந்தவனப் பகுதியில் பிரசாதத்தை பகிர்ந்து கொள்ளும் குடும்பம்.



அகத்திலிருந்து பறித்துச் சென்ற மனோரஞ்சிதப் பூக்களை நம்பெருமாள் பாதத்தில் பட்டர் சேர்த்தார்.மனமும் கண்களும் நிறைந்தது.உடலில் இளமை யும் தெம்பும் இருக்கும் போதே இவைகளைக் காணும் பாக்கியம் கிடைக்க வேண்டும்.

” கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை
தளர்விளராகில் சார்வது சதிரே. ” ((திருவாய்மொழி – 2.10.1) )

ஆனால் முதியவர்கள் எத்தனையோபேர் இந்த வைபவத்தை காண தள்ளாத வயதிலும் வருகிறார்கள் என்பதை காண முடிகிறது.அவரகளை உடன் இருந்து பொறுமையாக அழைத்துச் செல்லும் இளயவர்களை காணும்போது வாயாரவாழ்த்தத் தோன்றுகிறது.நான் பார்த்த ஒரு முதிய தள்ளாத, ஊன்றுகோல் துணையின்றி நடக்க இயலாத ஒரு பாட்டியை 22 வயது மதிக்கத் தக்க பேரன் உடனிருந்து பொறுமையாக அழைத்துச் சென்ற காட்சியை காண முடிந்தது.

                                   தள்ளாத வயதிலும் சேர்த்தி காண வந்த பாட்டி



                        உடனிருந்து பொருமையாக அழைத்துச் செல்லும் பேரன்





Saturday 5 April, 2014

துறையூர் பெருமாள் மலை

துறையூர் என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது சித்தப்பா, கு.ப.ரா,தி.ஜா, வல்லிக் கண்ணன், ஆகியோர்தான். நான் முதன் முதலில் சித்தப்பாவுடன் தான் துறையூர் வழியாக முசிறி வந்து கரூர் சென்றேன்.திருலோகசீத்தாராம் அவர்களின் கிராம ஊழியன் பத்திரிகை துறையூரிலிருந்து தான் வந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியராக கு.ப.ரா இருந்துளார், அவருக்கு பிறகு வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்துள்ளார்.சரி அதற்கின்ன என்கிறீர்களா?



துறையூர் பெருமாள் மலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி சேவை சாதிக்க அடியேனுக்கு நேற்று வாய்த்தது.துறையூருக்கு அருகில் ( பெரம்பலூர் செல்லும் சாலையில்) இருக்கும் இம்மலையில் பேரழகுடன் கோவில் கொண்டுள்ள பெருமாள்.1554 மலைப் படிக்கட்டுகள்.வாகனங்கள் செல்ல 5 கி.மீ சுற்று வழிப்பாதை . கடந்த 25 வருடங்களுக்கு முன் தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்த ஒரு கப்பல் வணிகர் தனது சொந்த முயற்சியால் இந்தப் பாதையை அமத்ததாக உடன் வந்த நண்ப சதானந்தன் தெரிவித்தார்.வழி நெடுகிலும் வானரங்கள்.ஆங்காங்கே அவைகளுக்கு பிளாஸ்டிக் டப் பில் உணவு.யார் கொண்டுவைக்கிறார்கள்? கீழே யிருந்து ஓட்டல் காரர்கள், மற்றும் ஓங்காரக்குடில் , போன்ற இடங்களிள் இருந்து தினமும் கொண்டு வந்து வைப்பதாகச் சொன்னார்.இதனால் தான் குரங்குகள் ஊருக்குள் வருவதில்லை எனவும் தெரிவித்தார்.
           மலைமேல் கோவில்.பெருமாள் கிழக்கு நோக்கி இரு நாயகிகளுடனும் சேவை சாதிக்கிறார். தாயாருக்கு ( அலமேலுமங்கா) தனி சன்னதி.தாயார் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.அற்புதமான கட்டமைப்பு.நாயக்கர் கால கட்டடக்கலை மிளிர்கிறது.சிங்கத்தின் முகம் அதன் வாயின் உள்ளே சுழலும் கல் உருண்டை, வெவ்வேறு ஓசை எழுப்பும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நான்கு தூண்கள் என நாயக்கர் கால டச் தெரிகிறது.
      ஆனால், கோவில் பட்டர் கரிகால் சோழன் கட்டியதாக சொல்கிறார்.கரிகால் சோழன் காலமும் நாயக்கர் காலமும் வெவ்வேறானவை.ஒருவேளை சோழர்கால கற்றளிகளை நாயக்கமன்னர்கள் விரிவு படுத்தியது போல ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம்...எனினும் கரிகால் சோழன்...டூ மச்.
திருப்பதிக்குச் செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை இங்கு செலுத்தலாம் என்றும் இங்கு பிரார்த்தனை செய்துகொண்டு திருப்பதியில் செலுத்த முடியாது எனவும் பட்டர் கூறினார்.
குறிப்பிட வேண்டிய விஷயம் தாயார் சன்னதிக்கு அருகில் பெருமாள் பாதம் எனும் ஓர் இடம் உள்ளது. அங்கு பெரிய அளவிலான பாத உருவம் உலோகத்தால் வைக்கப்பட்டுள்ளது.அதன் அருகில் ஒரு சிறு அறை போன்ற தொரு தடுப்பு. அங்கு கருப்புசாமி என போர்டு உள்ளது.உள்ளே வெண்கலத்தால் (பித்தளையா?) ஆன மூன்று குதிரைகள், சிறிய ஜான் உயரச் சிலைகள் .ஒன்றில் ஓர் மனிதன் அடுத்தது தனியாக.இவர்தான் கரிகால் சேழன் எனவும் அவன் அருகில் உள்ளது இளைப்பாறும் குதிரை எனவும் பட்டர் சொன்னார் ஒருமுறை கரிகால் சோழன் வேட்டைக்கு வரும்போது இந்த இடத்தில் ஒரு மரத்தடியில் (மரம் செப்பினால் வேயப்பட்டுள்ளது) பெருமாள் பிரச்ச்னமானதாகக் கூறுகிறார்..மேலே உள்ள பெயர்ப்பலகைக்கும் சொல்வதற்கும் தொடர்பு இல்லை.அந்த இடத்தில் சாம்பிராணி புகை போடும் ஒரு சட்டி. வரம் வேண்டுபவர்கள் மூன்று முறை சாம்பிராணியை புகையும் தணல் சட்டியில் போட்டு பிரார்த்தித்துக் கொண்டால் கைமேல் பலனாம்.நமக்குத்தான் நிறைய லிஸ்ட் இருக்கிறதே...நானும் மூன்று முறை சாம்பிராணி போட்டு வேண்டிக் கொண்டேன்.இந்த சாம்பிராணி சாம்பலை விபூதியாக வழங்குகிறார்கள்.
இந்த மலையை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.மலையடிவாரத்தில் வயல்களுக்கு இடையே பச்சாயி வீரய்யா கோவில் ஒன்று உள்ளது.பெருமாள் மீது உள்ள அதீத பத்தியால் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரய்யா என்ற விவசாயி நிறைமாத கர்ப்பிணியுடன் மலைமேல் சென்று பெருமாளை நித்தம் வழிபடும் வழக்கம் கொண்டவர்.ஒரு முறை அவ்வாறு செல்லும்போது பச்சாயி நெற்றியில் இட்டுக் கொள்ளும் திருமண் (நாமகட்டி) எடுத்துவராமல் வந்ததற்கு கோபமான வீரய்யா அங்கிருந்த மண் உருண்டையை எடுத்து மனைவிமேல் எறிய அவள் அங்கேயே உயிர் துறந்தாளாம்., மனம் வருந்திய வீரய்யா தானும் இறந்து போனாராம்,அவர்கள் சிறு  தெய்வமாக இப்போதும் கோயில் கொண்டுள்ளனர் அடிவாரத்தில்.ஆனால் நான் போன நேரம் அந்தக் கோயில் உள் போக எனக்கு வாய்ப்பு இல்லை.இந்தக் கதை கணவன் மனைவி இடையே கோவம் குறுக்கிடக்கூடாது என்பதை உணர்த்துவதாகப் படுகிறது.இது செவிவழிச் செய்தியாக இங்கு உலவுகிறது.பச்சாயி இந்தக் கோவிலில் கையில் குழந்தையுடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடுத்தமுறை சதா வுடன் இந்தக் கோயிலுக்குப் போய்வரவேண்டும்.