Wednesday 25 December, 2013

நார்த்தாமலை பயணம் 2

அங்கிருந்து இறங்கி மலைக்கோயிலை நோக்கி நடக்கத் துவங்கினோம்.
மஸ்தான் தர்காவிலிருந்து மலைக்கோவில் கொஞ்ச தூரம் தான்.இரு மலைகளுக்கிடையேயான நீர் வழ்ந்தோடிய சுவடுகள் தெரிந்தது.மழைபெய்யும்போது அதி வேகத்துடன் நீர் இந்த வழியாக வழிந்தோடும்.அவ்வளவு சரிவு.ஒரு மழைக்காலத்தில் இங்கு வரவேண்டும்.சோ வென்று மழை பொழியும் போது இந்த மஸ்தான் தர்காவிலிருந்து மழையை அனுபவிக்க வெண்டும் என தோன்றியது.

சிறிது தூரம் சரிவான பெரும் பாறையில் ஏறிச் சென்றவுடன் சமதளத்தை அடைகிறது.அங்கு புதரான பகுதிகளுக்கிடையே ஒற்ரையடிப்பாதை செல்கிறது.அதைபிடித்தபடியே சென்றால் சட்டென கண்முன் அழகாய் தோன்றி நிற்கிறது விஜயாலய சோழீஸ்வரம் கோவில்.மஞ்சள் நிற கற்களால் கட்டப்பட்ட கோவில்.தஞ்சை,கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய கோவில்களில் உள்ளது போல பழுப்பேறிய மஞ்சள் நிற கற்கள். தஞ்சை கோவிலுக்கு இங்கிருந்து தான் கற்கள் சென்றதாக கூறுகிறார்கள்.இங்கிருந்து 60 கி.மீ. தஞ்சை.குறுக்கே ஆறுகள் இல்லை.மலைகள் இல்லை.கற்களை நிறத்தை வைத்துப் பார்க்கும் போது இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
           கட்டுமானம் நன்கு சிதிலம் அடைந்து யாரோ மீண்டும் அடுக்கி வைத்த மாதிரி இருக்கிறது.கலைத்துப்போட்ட சீடுக்கட்டு மனதில் வந்து போனது.இன்னும் சீர்படுத்தப்படாத கற்கள் தூண்கள் ஆங்காங்கே கிடக்கிறது.கோவிலைச் சுற்றி ஆறு மண்டபங்கள்.அனைத்தும் சிதிலத்தின் மிச்சம்.ஒரு வாழ்வு,வரலாறு,கலைந்து கிடப்பது போல தோன்றியது.


ஒரு கல்வெட்டில் இப்படி குறித்துள்ளார்கள்
{"ஸவஸ்தி ஸ்ரீ சாத்தம் பூதியான
இளங்கோவதி அரையன் ௭டுப்பித்த கற்றளி
மழை இடித்தழிய மல்லன் விதுமன்
ஆயின தென்னவன் தமிழதிரையன் புதுக்கு"
இக்கோவில் சாத்தம்பூதி என்ற இளங்கோவதி 
முத்தரையனால்எழுப்பபட்டது எனவும்,மழையால் அழிந்துபட்டு போக, மல்லன்  
விதும்பன் என்னும் 
தென்னவன் தமிழதிரையன் , இந்த கற்றளியைபுதுப்பித்தான் என்றும் 
குறிப்பிட்டுள்ளது.} நன்றி: http://myhistoryuntold.blogspot.in/2013/10/blog-post_19.html


அப்படி எனில் மழைக்காலங்களில் இங்கு நீர்பெறுக்கெடுத்து ஓடி இக்கோவில் கட்டுமானங்களை அவ்வப்போது கலைத்துவிடும் எனத் தெரிகிறது.
            ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அங்கு குப்பை கூளங்கள் இல்லை, பிளாஸ்டிக் ,பாட்டில்,இத்யாதிகள் இல்லை,பெருக்கி வைத்த மாதிரி சுத்தமாக இருக்கிறது வளாகம்.புல்வெளி நன்கு பராமரிக்கப் படுகிறது.
விமானங்கள் அறைகுறையாய் இருக்கிறது.உள்ளே சாமிசிலைகள் ஏதும் இல்லை,பிரதானக் கோலிலிலே மடடும் பெரிய சிவலிங்கம் உள்ளது.யாரும் இதற்கு பூசைகள் செய்வதாய் தெரியவில்லை.இங்கு யாரேனும் கண்ணப்பர் வந்தால் தான் உண்டு.நான் சென்ற சமயம் அங்கு எங்களைத்தவிர வேறு யாறும் இல்லை.தனிமை ஒரு அமானுஷ்யத்தை ஏற்படுத்தியது.
  கோவில் மேற்கு பார்த்து இருக்கிறது.

கோவிலுக்கு நேர் எதிரே நந்தி சிலை நாலு கால் தூண் மேடையில் அழகாய் இருக்கிறது.எனக்கு எப்போதும் நந்தி சிலைகள் மேல் ஆசை அதிகம்.ஒவ்வொரு நந்தியும் ஒவ்வொருவிதமான அழகுடன் இருக்கிறது.எங்கள் ஊர் விருத்த கிரீஸ்வரர் முன் மண்டப பெரிய நந்தி,மூலவருக்கு எதிரே இருக்கும் சிறியநந்தி,பிரமாண்டமான பிரகதீஸ்வரர் நந்தி, கங்கை கொண்ட சோழபுரம் மஞ்சள் நிற நந்தி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகுடன் இருக்கிறது.

மதில் வழியாக கோவிலுக்குள் நுழையும் வழி கிழக்கு பார்த்து உள்ளது.மதில்,வாயில் எல்லாம் உதிரியாய் சிதறி இருக்கிறது.



இது ஓரளவிற்கு செப்பனிட்ட நிலை, பல இடங்களில் இக்கால கைங்கர்யங்கள் சிமெண்ட் பூசி மேற்கொள்ளப்படுள்ளது. குறிப்பாக மையமாக உள்ள கோவிலின் விமானம் முழுக்க முழுக்க ரீமேக்.சிமெண்ட் பூசி மொழுகி உள்ளார்கள்.விமானத்தின் மேல் கலசம் போல் ஒரு கல் வைத்திருக்கிறார்கள்.அதுவும் ஒட்ட வைத்தது போல் இருக்கிறது.

கோவிலுக்கு நேர் எதிரே அடிபாகம் உள்ளடங்கி மேல்பாகம் நீட்டிய ஒரு பெரிய பாறையில் நீள் வாக்கில் செவ்வக அளவில் ஒரு குடைவறை.சமணர்களுடையது என பார்த்த வுடன் சொல்லிவிடலாம்.திருச்சி,திருவெள்ளரை,அரகண்டநல்லூர்,ஆகிய இடங்களில் உள்ளது போன்ற அமைப்பு.இதன் உள்ளே கருவறை காலியாக உள்ளது.வெளி மண்டபத்தில் ஒரே அளவிலான விஷ்ணு சிலைகள் கிழக்கு பார்த்து 10 வடக்கு பார்த்து 1 தெற்கு பார்த்து 1 என 12 சிலைகள் உள்ளது.அனைத்தும் புடைப்புச் சிற்பங்கள்.இதனை சமணக் குடகு என்றும் பதினெண்பூமி விண்ணகரம் என்றும் அழைக்கிறார்கள்.இதன் வெளிப்புறம் ஒரு மண்டபம் இருந்ததற்கான பீடம் இருக்கிஆது.அதில் சுற்றி சிறிய அளவில் தொடராக யானை யாளி என சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.வியக்கத்தக்க வகையில் எகிப்திய பாணி சிற்பமான  ஸ்பிங்கஸ் காணப்படுகிறது. காமதேனு வகையில் இருந்தாலும் சிங்கங்களுக்கு இடையே எப்படி பசு? பெண்சிங்கம் என்பதற்கான அடையாளமா?ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டிய விஷயம்.







ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வதென்பது எக்காலத்திலும் இருந்திருக்கிறது.7ம் நூற்றாண்டில் சமண குகையாக இருந்தது பின்னர் வைணவக் கோவிலாக மாற்றப் பட்டிருக்கலாம் என விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதை யார் கட்டினார்கள் என்பதற்கான கல்வெட்டு ஏதும் இல்லை.
      இதன் அருகே ஒரு சிறிய அளவிலான குடைவறைக் கோவில் அதில் ஒரு சிவலிங்கம் உள்ளது . இந்த குடைவரைக்குத்தான் பழியிலீச்வரம் என பெயர்.



கல்வெட்டு-855-896
விடேல்விடுகு முத்தரையன் மகன் சாத்தாம் பழீயிலிஇக்கோவிலை கட்டுவித்தான்.இக்கோவின் முன்பு முகமண்டபம்,நந்தி மண்டபம் ,பலிபீடம் ,ஆகியவற்றைகட்டுவித்தான்.பழியிலி சிறிய நங்கை பராமரிக்க கொடையளித்தாள் என்று கூறுகிறது.
ஒன்று மட்டும் தெரிகிறது .அவரவர் காலங்களில் என்னென்ன இறைக்கொள்கைகளை ஆள்பவர்கள் பின்பற்றினார்களோ அதன் பதிவுகளாக நார்த்தாமலையும், கோவில்களும் இருக்கிறது.சமணன் கட்டினானா  அதை மாற்றி விஷ்ணுவை வை.அடுத்த ஒருவன் விஷ்ணுவுக்கு மட்டுமா நாம் சிவனுக்கு குடைவோம் என போட்டி போட்டு வரலாறுகளை கல்லில் பதிவு செய்திருக்கின்றனர்.இதில் ஆச்சரியம் என்ன வெனில் இந்த காலத்திலேயே இவ்வளவு சிரமப் பட்டு போக வேண்டிய இந்த இடத்தை அந்த காலத்தில் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் எப்படி குடைந்தார்கள் என்பது தான்.”வரலாறு முக்கியம் அமைச்சரே”- என வடிவேல் படத்தில் சொல்வது மாதிரி ஒவ்வொரு கலத்திலும் ஒரு இரண்டாம் புலிகேசிகள் இருந்துள்ளனர்.
இந்த இடத்தை தாண்டி கொஞ்சம் பாறை மேல் ஏறினால் ஒரு சிறிய சுனை அதில் அல்லி மலர்கள் இருக்கிறது.

 அங்கிருந்து பாறாஇ மீது சற்று ஏறுவோமேயானால் கோவிலை மேலிருந்து கழுகுப்பார்வையில் பார்க்கும் வய்ப்பு கிடைக்கிறது.அற்புதமான காட்சி.



அங்கிருந்து சரிவாக இறங்கினால் ஒரு செங்கல் கட்டிடம் நகரத்தார் கலைப்பாணி.அது ஒரு பிள்ளையார் கோவில்.கோவில் என்பதற்கான எந்த அடையாளமும் ( பிள்ளையார் தவிர) அங்கு இல்லை.






 ஒரு காலத்தில் காவல் காப்பவர்கள் இருக்கும் இடமாக இருந்திருக்க வேண்டும்.பின்னர் பிள்ளையாரை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும்.அல்லது இஸ்லாமியர்களின் இடமாக இருந்திருக்க வேண்டும்.கட்டிடத்தின் மேல் வளைவுகள் இஸ்லாமிய கலை வடிவத்தில் தான் இருக்கிறது.அந்தக் கோவிலின் பின்புறம் ஒரு சுனை.நாரதர் குளம் என்கிறார்கள்.இதன் உள்ளே ஒரு சிவலிங்கம் உள்ளதாகவும் நீர்வற்றும் போது அது வெளியே தெரியும் எனவும் சொல்கிறார்கள்.அப்போது லிங்கத்தின் மீது விபூதி பட்டை பூசுவார்களாம்.அது அடுத்த முறை நீரில் மூழ்கி வெளியில் வரும் போது அப்படியே இருக்குமாம்,

அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் கடம்பர் மலை தெரிகிறது.அதன் கீழ்தான் ராஜராஜன் காலத்து சிவன் கோவிலும் கல்வெட்டுக்களும் உள்ளன. ஊருக்குள் நுழையும் போதே அக்கோவில் வலது புறம் மலையடிவாரத்தில் உள்ளது. முதலில் அங்கு செல்வதைவிட தூரத்தில் இருப்பதுவும், ஏற சிரமமாக இருப்பதுவுமான மேல மலைக்கு சென்று விட்டு பிறகு கடம்பர் மலை செல்வது தான் சௌகரியமானது.அடுத்து கடம்பர் மலை .


Tuesday 24 December, 2013

நார்த்தாமலை பயணம் 1

நார்த்தாமலை இந்தப் பெயரே எனக்கு எப்போதும் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.எனது மூதாதயர்களில் ஒருவரான மகாதேவிஸ்வாமிகள் இந்த ஊருக்கு வந்து தான் தவம் செய்து சன்னியாசம் பெற்றார் என செவி வழிச் செய்தி ஒன்று உண்டு.
             நார்த்தாமலை என்பது ஒரு சிறிய ஊர்.திருச்சி யிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் கீரனூர் தாண்டியதும் சிறிது தூரத்திலேயே சாலையின் வலப்புறம் உயர்ந்த குன்றுகள் தெரியத்துவங்கும்.அவைகள் நார்த்தாமலைக் குன்றுகள் தான்.துடையூர் என்ற கைக்காட்டி சாலை மேல் இடதுபுறம் இருக்கும் அதற்கு எதிரே சாலைக்கு வலப்புறம் ஒரு ஆர்ச் இருக்கும் அதனுள் சென்றால் நார்த்தாமலை.ஆனால் சாலையின் மீது நார்த்தாமலை என்பதான எந்த அறிவிப்புப் பலகையும் இல்லாதது ஆச்சரியம்.வலப்புறமாகத்திரும்பி ஆர்ச் உள் நுழைந்தால் தார்ச்சாலையின் இருபுறமும் விழுதுகள் தவழும் ஆலமரங்களுக்கு இடையே குண்டும் குழியுமான தார்ச்சாலைப்பயணம்.
இந்த ஊரில் ஒன்பது குன்றுகள் இருக்கின்றன.

மேல மலை,
கோட்டை மலை,
கடம்பர் மலை, பறையன் மலை,
 உவச்சன் மலை,
ஆளுருட்டி மலை,
பொம்மை மலை,
மண் மலை,
பொன்மலை

இதுபற்றிய விவரமான வரலாற்றுப் பதிவுகளுக்கு இங்கே செல்லவும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88

முன்பு ஒருமுறை புதுக்கோட்டை திருகோகர்ணம் கோவிலுக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் நார்த்தாமலை செல்ல முற்பட்டேன்.அந்திப்பொழுது ஆனதால் மலைக்கு அருகில் செல்லத்தயங்கி திரும்பிவிட்டேன்.எல்லா செயல்களுக்கும் ஏதேனும் ஒரு காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போல.எனக்குக் கூட ஒரு சந்தேகம் இருந்தது நம் மூதாதயர் போல ”நார்த்தாமலை சென்றால் எனக்கும் ஒருவேளை ஞானம் பிறந்து துறவரம் எய்திவிடுவேனோ?.” அடை அவியலைக்கூட துறக்க முடியாத எனக்கு ஆசையை துறப்பதெல்லாம் சாத்தியமில்லை.குண்டுமனி அளவுக்குக் கூட குண்டலினி எழும்பாது.பல முறை தியானத்தில் அமர்ந்து கனவு வரும் அளவு தூங்கி விழுந்துள்ளேன்.அதற்கெல்லாம் சிறந்த பயிற்சி வேண்டும்.நமக்காகவே படைக்கப்பட்டது பக்திமார்க்கம் தான்.ஞான மார்க்கத்திற்கு நான் லாயக்கில்லாதவன்.ஆசைகளின் அலைகளில் ஆனந்தக்கூத்தாடுபவன்.

நார்த்தாமலைக்கு போவதற்கு முன் இணையத்தில் இது பற்றிய தொகுப்புகளைப் படிக்க முற்பட்டேன்.ஜெயமோகன்,பத்ரிசேஷாத்ரி,விக்கிபீடியா,வரலாறு.காம்,பொய்ட்ரிஸ்டோன் விஜய், ஆகியவைகளைத்தவிர வேறு உபயோகமுள்ள தகவல்கள் கிடைக்கவில்லை.மற்ற தெல்லாம் காப்பி பேஸ்ட் வகையறா.எஸ்.ராமகிருஷ்ணன் நார்த்தாமலையை பற்றி எழுதியுள்ளாரா? சமீபத்தில் வெளிவ்ந்த இலக்கற்றபயணி வரையில் இல்லை என்றே நினைக்கிறேன்.நாம் பார்த்து வந்த இடத்தைப்பற்றி எஸ்.ரா.எழுதியதை படிக்கும் போது ஏற்படும் ஆதங்கம் அதிகம்.”அட நாம கூட போனோமே இதுமாதிரி பார்க்கத் தோன்றவில்லையே” என்றிருக்கும்.

                                                  நேர்வழியில் செல்லும் சாலை ஓரிடத்தில் வலப்புறம் முட்டி திரும்பும்.அந்த இடத்திற்கு எதிரே ஒரு சிறிய கான்கிரீட் சாலை சாலையை ஒட்டி இருபுறமும் வீடுகள் பாத்திரம் கழுவுதல், குழந்தையை குளிப்பாட்டுதல்,ஆட்டை கட்டிவைத்தல், என்பதான அனைத்தும் இந்தச் சாலையில் தான் மக்கள் செய்கிறார்கள்.பார்த்துச் செல்ல வேண்டும்.நான்கு சக்கர வாகனம் என்றால் ரொம்ப ஜாக்கிரதை வேண்டும்.அதன்வழியே ஊர்ந்து சென்றால் முடிவில் கான்கிரீட் சாலை முடிவடையும் அங்கிருந்து இரண்டு மண் ஒற்றையடிப் பாதைகள் மேற்காகவும்,தெற்காகவும் பிரியும்,

                                மேற்காக பிரியும் வழி யில் நடந்துதான் செல்ல வேண்டும். ஒரு பெரிய குளக்கரையில் கொண்டுபோய் சேர்க்கும்.குளத்திற்கு அந்தப்புறம் பெரும்பாறையாய் இருப்பது தான் மேலமலை.இதன் வடபகுதி மீது ஏறி சுமார் 2.5 கி.மீ நடந்து சென்றால் சமணக்குடகு,பழியிலீச்வரம்,  விசயாலய சோழிசுவரம்,ஆகிய வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்கள் உள்ளன.
                                         இன்னொரு வழியான தெற்குபக்கம் செல்லும் மண்பாதையில் சென்றால் சுமார் 1.00 வரையில் வாகனத்தில் செல்லலாம்.திகிலூட்டும் காட்டுப்பாதை.அதுவும் 1.00 கி.மீ ல் ஒரிடத்தில் முடியும்.அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு நடைபயணம் தொடங்க வெண்டும்.அங்கிருந்து 1.00 கி.மீ.இருமலைகளுக்கிடையேயான மலைச்சரிவில் நடந்தால் மேற்சொன்ன பகுதிக்குச் செல்லலாம்.


                   போகும் வழியிலேயே இடதுபுறம் சற்று உயரமான குன்றிற்கு படிக்கட்டுச் செல்லும் .இதுதான் ”ஹஸ்ரத் மஸ்தான் தர்கா” மஸ்தான் என்பவர் ஓர் இஸ்லாமிய இறைத்தூதராக 400 வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளார்.இங்குள்ள மூலிகைகளை கொண்டு சில வைத்தியங்களையும் செய்துள்ளார்.இந்த தர்க்காவிற்கு மேல்பகுதியில் உள்ள குகைப்போன்ற பகுதியில் தான் இவர் சித்தி அடந்ததாக கூறுகின்றனர்.இப்போதும் பவுர்ணமி தினத்து இரவில் இங்கு சிறப்பு பிரார்த்தனை/தொழுகை நடைபெறுகிறது.இவர் ஒருமுறை இங்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது குறுக்கே வந்த பாம்பு இவருக்கு இடயூறு செய்யக்கூடாது என கல்லாகிவிட்டதாம்.அதன் அடையாளங்களை கீழேபாறையில் காண்பிக்கிறார்கள்.அது ஃபாசில் மாதிரி இருக்கிறது.



                                ஒரு பெரிய பாறயின் கீழ் சற்று சிறிய பாறை தாங்கிக் கொண்டுள்ளது அதன் அடியில் குகை உள்ளது.உள்ளே தர்க்காவில் உள்ளது போல பட்டுப்போர்வை போற்றிய மேடு.விளக்கு ஏர்றுகிறார்கள்.ஊதுவர்த்தி ஏற்றுகிறார்கள்.அந்த இடத்தில் சிமெண்ட் தரைபோடப்பட்டு அமரும்போது சிலென்று இருக்கிறது.நாங்கல் சென்றபோது ”அப்துல்ரஹ்மான்” என்பவர் அங்கிருந்தார்.அவர்தான் ”துவா” ஓதினார்.அரபியாக இருந்தாலும் அவர் சொல்லும் தருணம் கண்களைமூடிக்கொண்டு அந்த குகையில் அமர்ந்திருக்கும் போது இனம் புரியாத அமைதி ஏற்படுகிறது.

                 கண்ணை மூடிக்கொண்டபோது பாபா நினைவுக்கு வந்தார்.மகாதேவி ஸ்வாமிகள் இங்கு இந்த தர்காவிற்கு வந்திருப்பாரோ? வந்திருந்தால் இங்குதான் அமர்ந்திருப்பார்.காலங்கள் கடந்து மனம் பிரயாணித்தது.ஆன்மீக நாட்டம் உள்ளதால் தானே ரமணரை அண்ணாமலை அழைத்தது.அதுபோல சித்தர்களும் யோகிகளும் ஏதோ ஒரு சக்தி இருப்பதால் தான் இங்கு வந்திருக்க வேண்டும்.இவ்வளவு தூரம் கடந்து மகாதேவிஸ்வாமிகள் ஏன் இங்கு வரவேண்டும்?இந்த மஸ்தான் ஏன் இங்கேயே வாழ்ந்தார்? நான் ஏன் இங்கு இன்று இந்த இடத்தில் அமர்ந்து இதையெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டும். பழங்கால கோயிலைப் பார்க்க வந்தவன் இப்படி ஒரு தர்காவில் ஏன் அமர்ந்திருக்க வேண்டும்.
                                அரபியிலிருந்து தமிழுக்கு மாறினார் அப்துல்ரஹ்மான்.அற்புத மான வார்த்தைகளால் வாழ்த்தி,பிரார்த்தனை செய்தார்.சுனைத்தண்ணீர் புனிதம் என ஒரு பாட்டிலில் இருந்து கொடுத்தார்.கொஞ்சம் சந்தனம் கொடுத்தார்.மயிலிறகால் முகத்தில் வருடி அரபியில் ஏதோ சொன்னர்.போர்வை போற்றிய மேட்டின் மேல் தலை வைத்து வேண்டிக் கொள்ளச் சொன்னர்.


                                 மஸ்தான் அப்பா அழைக்காமல் இங்கு நீங்கள் வரமுடியாது என்றார்.அப்பா என்றவுடன் அப்பா ஞாபகம்.அப்பாவுடன் இந்த மலையில் ஏறுவது போன்ற பிம்பம் மனதுள் வந்துபோனது.வெளியே வ்ந்ததும் 400 வருஷமாக இருக்கும் ஒரு மரத்தை காட்டினார்.சின்ன மரமாக இருந்தது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு தூளி கட்டுவார்களாம்.பவுர்ணமி அன்று மஸ்தான் சித்தி அடைந்த இடமான குகைக்கு படுத்தவாறே ஊர்ந்து செல்லும் பாதையில் செல்லலாம் எனவும்,.சில சமயம் இன்னும் வெள்ளைப்பாம்பு இங்கு வ்ந்து போவதாகவும் கூறினார்.கேட்கும் போதே திரில்லிங்காக இருந்தது.அப்துல் ரக்ஹ்மானிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.



                              சிவன் கோவிலைப்பற்றியும்,ஊர்பெயர்பற்றியும்,கோவிலுக்கு பிபுறமுள்ள சுனையில் சிவலிங்கம் முழுகியுள்ளது எனவும் நீர்வற்றும் போது அதன் நெற்றியில் இருக்கும் விபூதிபட்டை கலைவதில்லை எனவும் பலதகவல்களை சொன்னர்.

ஊர் பெயர் காரணம்

நாரதர் மலைதான் நார்த்தாமலை என மருவியது என சொல்கிறார்கள்.இன்னும் சில வலைத்தலங்களில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றபோது கீழே விழுந்தது தான் இந்த ஒன்பது குன்றுகளும் என்று சொல்கிறார்கள்.”நார்த்தங்காய் மரம் நிறைய இருந்ததால் இந்தபெயர் வந்தது என யாரும் சொல்ல வில்லை.”
சில கோவில்களில்  அனுமன் சிலையில் சஞ்சீவி மலையை கையில் அடுக்கி வைத்த லட்டுமாதிரி சிற்பிகள் செதுக்கி யிருப்பார்கள்.அதில் ஒன்பது லட்டு விழுந்துவிட்டதோ என்னவோ?
வணிகர்கள் இருந்த நகரம் என்பதால் நகரத்தார் மலை எனவும் பெயர் காரணம் கூறுகின்றனர்.
அங்கிருந்து இறங்கி மலைக்கோயிலை நோக்கி நடக்கத் துவங்கினோம்.

இன்னும் தொடருவோம்.


Sunday 22 September, 2013

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமை .நேற்று ஸ்ரீரங்கத்தில் டி.வி.எஸ் ஊழியர்கள் மிக அருமையாக தொண்டு செய்தனர்,கூட்ட நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.வி.ஐ.பி யாக இருந்தாலும் ரூ.250 கியூ மூலமாக மட்டுமே வரவேண்டும்.தேவையற்ற தேக்குதல் இல்லை.காத்திருக்கும் வேலைஈலை.கியூ நகர்ந்து கொண்டே இருந்தது.மிக எளிதில் மூலஸ்தானம் செல்ல முடிந்தது.வாழ்த்துக்கள்.

மதியம் மதுராகபே சாப்பாடு.தாயார்,மூலவர்,சக்கரத்தாழ்வார் சேவை,மாலை முரளிகாபி...பேஷ்...பேஷ்..நேற்றைய நாள் அருமை.


Sunday 15 September, 2013

திருநீர்மலை

நீண்ட நாட்களாக தரிசிக்க வேண்டும் என நினைத்திருந்த திருநீர்மலை ஷேத்திரத்தை தரிசிக்க ஒரு வாய்ப்பு இப்போது கிடைத்தது.பல்லாவரத்திலிருந்து இடது பக்கம் பிரியும் சாலையில் ஒரு 3 கி.மீ தாண்டிய உடனேயே சென்னை பரபரப்பு அடங்கி சாலை ஏதோ குக்கிராமத்திற்கு வந்து விட்ட உணர்வு வ்ந்துவிடுகிறது.செல்லும் வழியில் உயர்ந்த ஏரிக்கரை.வண்டியை நிறுத்திவிட்டு ஏரிக்கரையில் ஏறி பார்த்தால் பிரம்மாண்டமான ஏரி.நீர் நிறைந்து காணப்பட்டது.பல்வேறு விதமான பறவைகள் வெள்ளையும் கருப்புமாக பெரிய பெரிய சைசில் நீரில் நீந்திக்கொண்டிருந்தன.வேடந்தாங்கல் வந்துவிட்டோமா? என்கிற உணர்வு வந்து விடுகிறது.
கோவில் காலை எட்டு மணிக்கு மேல்தான் திறக்கிறார்கள்.கீழே ஒரு கோவில்.மலைமீது ஒரு கோவில்.

இது கீழே உள்ள கோவில்.



மலைமேல் நின்றகோலம் ,கிடந்தகோலம்,இருந்தகோலம் என மூன்று பெருமாள் அருள்பாலிக்கிறார்.














செட்டிப்புண்ணியம்

பிரசித்திபெற்ற செட்டிப்புண்ணியம் ஸ்ரீ தேவநாதப் பெருமாள்  யோக ஹயக்ரீவர் கோவிலில் உள்ளது இம்மரம்.


சிங்கபெருமாள் கோவில்

சிங்க பெருமாள் கோவில் - ரயில் மார்க்கமாக சென்னை செல்லும் போது இந்த பெயரை பெயர்ப்பலகையில் பார்த்ததுண்டு.இந்த முறை நேரில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.அழகான கோவில்.பல்லவர்கால குடைவரைக் கோவில்.




பாடலாத்ரி நரசிம்மப்பெருமாள்.இங்கு நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்ட வண்ணம் இருப்பது புதுமையானது.இது சிற்பியின் தவறாகக் கூட இருக்கலாம்.பெரும்பாலும் நரசிம்மப் பெருமாள் சிலை இடது காலை மடித்து வலதுகாலை தொங்க விட்டபடித்தான்  இருக்கும்.இங்கு சற்று மாற்றம்.”பாடலம்” என்றால் சிவப்பு என்றும் ”அத்ரி” என்றால் மலை என்றும் அர்த்தம் என எழுதி போட்டுள்ளார்கள்.மலை சிவப்பு நிறக்கல்லாக இருப்பதனால் அந்த பெயர் போலிருக்கிறது.பிரம்மாண்ட புராணத்தில் இத் தலம் பற்றிய குறிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.மூன்றாவது கண் இருக்கிறது நரசிம்மப் பெருமாளுக்கு.கோவிலை பிரதட்சிணம் வரும் போது சற்றே சிறிய குன்றில் ஏறி இறங்கி தான் வரவேண்டும்.சிறிய (ரொம்ப சிறிய) தொன்னையில் புளியோதரை விலைக்குக் கிடைக்கிறது.பிரதோஷ காலம் ரொம்ப விசேஷம்.